பழைய சங்க நூல்களைப் படித்துப் பொருள் உணர்தல் எளிதன்று. அந்த நூல்களில் உள்ள கருத்தை விளக்கினால் யாவரும் உணரலாம். அக்காலத்து நடைதான் இதற்குக் காரணம். ஆனாலும் அந்த நடையிலே இன்ன சொல்லுக்கு இன்னதுதான் பொருள் என்ற வரையறை உண்டு; ஒழுங்கு உண்டு. ஆகையால் சில நூல்களை நன்றாகப் படித்துவிட்டால் சங்க காலத்துச் சொற்றொடர்ப்போக்கு உள்ளத்துக்குத் தெளிவாகிவிடும். பிறகு சங்க நூல்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளலாம். பிற் காலத்து நூல்களைப்பற்றி இப்படிச் சொல்ல முடியாது.
சங்க நூலில் உள்ள அழகை அநுபவிக்க, அதில் உள்ள கருத்தை முதலில் எடுத்துக்காட்டி, சொற்களையும் இடை யிடையே புகுத்தி எழுதினால் ஒருவாறு கவிகளை உணரலா மென்றெண்ணியே சில சங்க நூற் பாடல்களைக் ""காவியமும் ஓவியமும்"" என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன். அந்த முறை நன்றாக இருக்கிறதென்று அன்பர்கள் சொன்னார்கள். அந்த முறையில், பின்னும் பல பாடல்களுக்கு விளக்கம் எழுத வேண்டுமென்று பலர் வற்புறுத்தினர்.
பத்துப் பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றுப் படையைப் புது முறையில் விளக்கலாமென்று எண்ணினேன். ஒரு முறை சென்னை கோகலே ஹாலில் இந்நூலின் விரிவுரையைத் தொடர்ச்சியாக நிகழ்த்தினேன். அது முதலே புத்தக உருவாக்கி எழுத வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. முருகன் திருவருளால் அது இப்போது முற்றுப்பெற்றது.
திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்யும் அன்பர் பலர் உண்டு. அவர்களிற் பெரும்பாலோர் மந்திரத்தைச் சொல்லுவதுபோல நெட்டுருப் போட்டு ஒப்பிக்கிறார்கள். நச்சினார்க்கினியர் உரையைக் கொண்டு இதன் பொருளை அறிந்து கொள்வதுகூட அவர்களுக்கு இயலாத காரியம்.
By:
Ki Va Jagannathan Imprint: Nilan Publishers Dimensions:
Height: 229mm,
Width: 152mm,
Spine: 10mm
Weight: 249g ISBN:9788199792678 ISBN 10: 8199792671 Pages: 182 Publication Date:01 January 2026 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Paperback Publisher's Status: Active