நீங்கள் எத்தனையோ நூல்களைப் படிக்கிறீர்கள்; படிக்கும் போது உணர்ச்சி வசப்படுகிறீர்கள்; உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது; என்னவெல்லாமோ எண்ணுகிறீர்கள். அவற்றில் சில உங்களைச் சிரிக்க வைக்கின்றன; சில சிந்திக்க வைக் கின்றன; சில அழ வைக்கின்றன; இன்னும் சில ஆத்திரமும் கொள்ள வைக்கின்றன. அவையனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ஓர் உருவம் கொடுத்தால் எப்படியிருக்கும் ?- அதுவே 'பசி கோவிந்தம்' என்னும் இந்நூல்.
தமிழில் இது ஒரு துறை -ஆம், தற்போது மறைந்து கிடக்கும் துறை. இத் துறைக்கு,
''இருவர் நூற்கும்
ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது
புடைநூ லாகும்""
என்று நன்னூல் இலக்கணம் கூறுகிறது. அதன்படி, இந்நூலின் முதல் நூல் திரு. சங்கராச்சாரியாரின் 'மோகமுத்கர'மாகும். முத்கரமென்றால் 'மோகத்தை உடைக்கும் சம்மட்டி' என்று பொருள்.
அந்தச் சம்மட்டிக்கு வழி நூல் திரு. ராஜகோபாலாச்சாரியாரின் 'பஜகோவிந்த' மாகும்.
இவை யிரண்டுக்கும் புடை நூலாகப் படைக்கப்பட்டிருப்பதே திரு. விந்தனின் 'பசி கோவிந்தம்.'
அதாவது, அவ்விருவரும் தம் கருத்துக்களை வெளியிட மேற்கொண்டுள்ள 'பாணி' யையே இவரும் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அந்நூற்களின் கருத்துக்களுக்கு மட்டும் மாறுபடுகிறார். எனவே, இது திரிபு பெறுகிறது. இருவர் நூற்கும் ரூபத்தில் ஒத்தும், கருத்துக்களில் திரிபு பெற்றும் இயன்றுள்ளதால் இதனைப் 'புடைநூல்' என்பது தமிழ் மரபாகும்.