திருநாவுக்கரசருடைய தேவாரங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. நான்கு, ஐந்து, ஆறாந் திருமுறைகளாக அவை விளங்குகின்றன. ஐந்தாந் திருமுறையில் நூறு பதிகங்கள் அடங்கியிருக்கின்றன.
இந்தப் பதிகங்கள் யாவும் திருக்குறுந்தொகை. குறுந்தொகை என்பது யாப்புக்குரிய பெயரென்று தோன்றுகிறது. குறுகிய பாவினமாகிய கலிவிருத்தங்களாக அமைந்தவை இப்பாடல்கள். பதிகம் என்பது பத்துப் பாடல்களை யுடையது என்று கொள்வது வழக்கம். ஆயினும் பயனைக் கூறும் பாட்டோடு பதினொன்றாக இருப்பதும் உண்டு. தம் பெயரை அமைப்பதும் பயன் கூறுவதும் அப்பர் சுவாமிகளுக்கு வழக்கம் இல்லை. ஆனா லும் பலபதிகங்கள் பதினொரு பாடல்களை உடையனவாக இருக் கின்றன. இத்திருமுறையில் 22 பதிகங்கள் 11 பாடல்களை உடையன. இரண்டு பதிகங்களில் (7,53) 12 பாடல்கள் இருக்கின்றன. 97-ஆம் பதிகத்தில் 30 பாடல்கள் அமைந்துள்ளன.
ஏட்டிலிருந்து எடுத்தபோதே சிதலுக்கு இரையானவைபோக எஞ்சியவையே கிடைத்தன. ஆதலால் இத்திருமுறைகளிலும் இடை யிடையே பாடல்கள் குறைந்துள்ள பதிகங்களும் இருக்கின்றன. அவ்வாறு உள்ளவை 13 பதிகங்கள் (9,15,26,38, 40, 60, 67, 76, 78, 79, 81, 85, 91.)
முதல் 88 பதிகங்களும் தலங்களைப் பற்றியவை. பத்துத் தலங்களுக்கு இரண்டிரண்டு பதிகங்களும், 68 தலங்களுக்கு ஒவ்வொரு பதிகமும் உள்ளன. எஞ்சிய பன்னிரண்டு பதிகங்களும் பொதுவானவை. தனிக்குறுந்தொகை 89, 90, 91 காலபாசத்திருக் குறுந்தொகை, மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை, தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை, மனத்தொகைத் திருக்குறுந்தொகை,சித்தத் தொகைத் திருக்குறுந்தொகை, உள்ளத் திருக்குறுந்தொகை, பாவநாசத் திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந்தொகை என்ற பெயர்கள் முறையே அவற்றிற்கு வழங்கும்.